நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகளை தடுத்து நிலையான மீன் பிடி தொழிலை ஊக்குவிப்போம்' எனும் தொனிப்பொருளில் மீனவ சமூகம், பொறுப்பு மிக்க அதிகாரிகள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் பொது மண்டபத்தில் இடம் பெற்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனக்களின் அதிகாரிகள் ஊடாக விசேட தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
மேலும் குறித்த கலந்துரையாடலில் நாட்டில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாகவும் அவற்றினால் ஏற்படும் சமூக பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் மற்றும் விளைவுகள் தொடர்பாக மீனவ சமூகத்தை சேர்ந்த பிரதி நிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொடர்பாக மக்கள் சார்பான கருத்துக்கள் தொடர்பாகவும் அவர்கள் மத்தியிலான சந்தேகங்கள் தொடர்பாகவும் பொதுக் கலந்துரையாடல் மூலம் உரிய பதில் வழங்கப்படமை குறிப்பிடதக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்